வன்முறை தீவைப்பில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்ற போது பொதுமக்களுக்கு எதிராக வன்முறை தீ வைப்பில் ஈடுபட்ட காவலர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 23 அதிகாலை முதல் காவல்துறை நடத்தி வரும் அடக்குமுறையின் உண்மைப் பின்னணியைக் கண்டறிந்து, அத்துமீறிய காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உடனடியாக பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த ஆணையிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
பொதுமக்களுக்கு எதிராக வன்முறை தீவைப்பில் ஈடுபட்ட காவலர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் கொடுந்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கும் பொருளிழப்புக்கு ஆளானவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகளாக இருக்கும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி போன்ற தமிழரல்லாதோர்க்குத் தமிழர்களின் பண்பாட்டுரிமை பற்றிய பரிவு சிறிதும் இல்லை என்பதும் இப்போது நடந்துள்ள அடக்குமுறைக்குக் காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலத்தில் தமிழரல்லாதோரை காவல்துறை உயரதிகாரிகளாக அமர்த்துவதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.