இஸ்ரோ தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த சிவனுக்கு வேல்முருகன் வாழ்த்து
இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சிவனுக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி வாழ்த்து தெரிவித்து உள்ளது.
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சிவனுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள கே. சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தை சேர்ந்த சிவனுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் தேர்வு செய்யப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் என்பதில் மிக்க பெருமிதமே கொள்கிறோம். தமிழர் ஒருவர் இஸ்ரோவின் தலைவராகியிருப்பது இதுதான் முதல் முறை.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தொடர்கின்ற தமிழர்களின் வரலாற்றுச் சாதனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே சிவன் தேர்வினைப் பார்க்கிறோம். முன்பு நிலவுக்கு இந்தியா சந்திராயன் என்ற விண்கலம் அனுப்பியதை அறிவோம்.
அந்த சாதனையைச் செய்த தமிழரான மயில்சாமி அண்ணாதுரையை உலகமே அண்ணாந்து பார்த்ததையும் அறிவோம். சந்திராயன் திட்டத்தின் இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியைச் சேர்ந்தவராவார்.
தொடர்ந்து விண்வெளித் துறையில் புரிந்துவரும் சாதனைகளால் இந்தியாவின் புகழை உலக அரங்கில் நிலைநாட்டிய பெருமைக்குரிய தமிழர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.