சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல்... தை பொங்கல் ஸ்பெஷல்
தை பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் சமைத்து சூரியனை வழிபட்டு பின்னர் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
சென்னை: தை முதல் தை திருநாள் நாளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பச்சை மொச்சை குழம்பு, சர்க்கரை பூசணி பச்சடி சமைத்து சாப்பிடுவார்கள்.
தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாளில் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபடுவது சிறப்பாகும்.
தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர்.
உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.
இனிப்பு பொங்கல்
புதுப்பானையில் கோலமிட்டு அதில் மஞ்சள், இஞ்சி குலை கட்டி புத்தரிசி வைத்து பொங்கல் சமைப்பது வழக்கம்.
இப்போது பல வீடுகளில் குக்கர் பொங்கல்தான் சமைக்கிறார்கள். அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். 3 விசில்வரை விடலாம். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறுகின்றனர். அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் ஊற்றி வாசனையாக கிளறி முந்திரியும், திராட்சையும் வறுத்து போட்டு கிளறினார் சர்க்கரை பொங்கல் தயார்.
நெய் பொங்கல்
இதேபோல பொங்கல் நாளில் வெண் பொங்கலும் சமைத்து இறைவனை வழிபட்டு சாப்பிடுவது வழக்கம். இஞ்சி, மிளகு சீரகம், முந்திரி, நெய், பச்சரிசி, பாசிப்பருப்பு கலந்து வெண் பொங்கல் வைப்பது வழக்கம்.
வைரஸ் கிருமிகளை இஞ்சி மற்றும் மஞ்சள் கிழங்கு அழிக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சத்தான குழம்பு
தை பொங்கல் நாளில் பச்சை மொச்சை குழம்பு, பூசணிக்காய் பச்சடி, அவரை கூட்டு சமைத்து சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. வாயு அதிகரிக்கக் கூடியதாக இருந்தாலும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பச்சை மொச்சை பொங்கலன்று உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் வலிமை அதிகரிக்கிறது. சிலர் வீட்டில் அனைத்து வகையான காய்கறிகளை போட்டு வறுத்து அரைத்து குழம்பு வைப்பார்கள்.
பற்களின் பலம்
தை பொங்கல் நாளில் கரும்பு சாப்பிடுவது வழக்கம். கரும்பினால் உடல் எரிச்சல் குறைவதுடன், பற்கறை நீக்கி சுத்தமடைகிறது. நன்கு மென்று தின்பதற்கு ஏற்றவாறு பற்களின் பலமும் அதிகரிக்கிறது.