வேந்தர் மூவிஸ் மதனின் போலீஸ் காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு
கைது செய்யப்பட்டுள்ள வேந்தர் மூவிஸ் மதனின் போலீஸ் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை 11வது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: வேந்தர் மூவிஸ் மதனின் போலீஸ் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும் மதனின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலைக் கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ.80 கோடி வசூலித்து மோசடி செய்து தலைமறைவானார் மதன். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். மேலும், மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவது தொடர்பாகவும் வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடப்பட்டிருந்தன. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான மதனை தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, மதனின் போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இதையடுத்து சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு மதன் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதனின் போலீஸ் காவலை மேலும் 2 நாள் நீட்டித்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதனின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.