மெடிக்கல் சீட் மோசடி வழக்கு.. வேந்தர் மூவிஸ் மதன் புழல் சிறையில் அடைப்பு.. ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்
மருத்துவ படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் ரூ.80 கோடி மோசடி செய்த புகாரில் மதன் ஜாமீனில் வந்த நிலையில் மீண்டும் சென்னையில் கைது செய்தது அமலாக்கத்துறை.
சென்னை: மருத்துவ படிப்பு சீட் மோசடி வழக்கு தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மதனை ஜூன் 6 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ.80 கோடி வசூலித்து மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு மே மாதம் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் வசூலித்த பணத்தை கொடுத்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்.
இதையடுத்து பல மாத தேடுதல் வேடைக்குப் பின்னர் திருப்பூரில் பெண் ஒருவருடன் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மதன் கோவையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பல கோடி ரூபாய் தொடர்புள்ள இந்த முறைகேட்டில், கறுப்புப்பணம் தலையீடு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் மதனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதுதொடர்பாக எந்தெந்த வகையில் பணம் பெறபட்டது? பெறப்பட்ட பணம் யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது? எந்தெந்த வகையில் செலவு செய்யப்பட்டது? என்பது குறித்து மதனிடம் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவரை அமாலாக்கதுறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மதன் சென்னை ராயபுரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூன் 6ம் தேதி வரை மதனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக மதன் தாம் வசூலித்த பணத்தை எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்துவிடம் தந்துவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார். வேந்தர் மூவிஸ் மதன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பச்சமுத்துவை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் மதன் வாக்குமூலத்தில் வலுவான ஆதாரம் உள்ளதால் எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவும் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.