வேந்தர் மூவிஸ் மதன் வழக்கு: போலீஸ் விசாரணை வளையத்தில் பிரபல தயாரிப்பாளர்கள்
மதன் பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர்களிம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் பண மோசடி வழக்கில் தாணு மற்றும் சிவாவிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் ரூ.100 கோடி வரை பண மோசடி செய்த வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே 29ஆம் தேதி தலைமறைவானார். இவரை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மதனை திருப்பூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதனை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் மதனிடம் விசாரிக்க குற்றப்பிரிவு ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட இரண்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மோசடி பணத்தை மதன் என்ன செய்தார்? எங்கு முதலீடு செய்தார்? என்பது குறித்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதற்கு மதன், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவிடம் பெற்றோர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுத்ததாகக் கூறியுள்ளாராம். இந்நிலையில் காவல்துறையினர் தாணு மற்றும் சிவா, பாலகுருவை விசாரணைக்கு அழைத்து, பணம் குறித்த தகவல்களை கேட்டு வருகின்றனர்.
மருத்துவ சீட்டுக்காக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதன் அளித்து வரும் வாக்குமூலங்கள் சினிமா துறையில் உள்ள பல முக்கிய புள்ளிகளை சிக்க வைக்கலாம் என்று கோடம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.