ப்ளிப்கார்ட் மூலம் வால்மார்ட் இந்திய சந்தைக்கு வந்தால் பெரும் போராட்டம் நடக்கும் : விக்கிரம ராஜா
ப்ளிப்கார்ட் மூலம் வால்மார்ட் இந்திய சந்தைக்கு வந்தால் பெரும் போராட்டம் நடக்கும் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை : வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட்டின் வருகையால் சில்லறை வியாபாரிகள் பெருமளவு பாதிப்பார்கள் என்றும், இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ப்ளிப்கார்ட் இந்திய இணையதளத்தின் பங்குகளை வால்மார்ட் வாங்க முடிவு செய்துள்ளது. இது சில்லறை வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும். ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கி இருப்பதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது. இது சிறுகடைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உட்பட சில்லறை வர்த்தகக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும். காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல், இனிமேல் வால்மார்ட்டால் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும்.
வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் இந்தியாவிக் நுழைவதன் மூலம், உலக அளவில் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதால் இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட், மால்கள், காய்கறி மார்க்கெட், மளிகை கடை, மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்படும்.
ஆனால், இதை திட்டமிட்டு மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் அப்பட்டமான பொய்யைச் சொல்லி வருகிறது.
தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். இவர்களைக் காப்பாற்ற வால்மார்ட் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதை அரசு தடை செய்ய வேண்டும்.
இதை செய்யத்தவறினால் இந்திய வணிகர்களை காப்பாற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.