ஓபிஎஸ்... ஈபிஎஸ்... எந்த அரசானாலும் எங்க நோக்கம் தமிழக முன்னேற்றம்தான் - வெங்கையா நாயுடு - வீடியோ
ஓபிஎஸ் ஆக இருந்தாலும், ஈபிஎஸ் ஆக இருந்தாலும் தமிழகம் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று வெங்கயா நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி, திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்து மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார்.
நாடு சுதந்திரம் பெற்று 69 ஆண்டாகியும் வறுமை, வேலையின்மை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் எண்ணம். மத்திய அரசின் முதல் நோக்கம் கருப்பு பணத்தை ஒழிப்பதுதான். ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக ஒரு போரை பிரதமர் மோடி நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஓபிஎஸ் ஆட்சி என்றாலும், இபிஎஸ் ஆட்சி என்றாலும் மாநிலத்தின் முன்னேற்றம் என்பது தான் எங்கள் நோக்கம். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் அரசியல். மற்ற நேரங்களில் மக்களின் முன்னேற்றம் தான் எங்களது நோக்கம்.
விவசாயம் நமது அடிப்படை கலாச்சாரம். விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே இரவுக்குள் விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து, திட்டுமிட்டால் மட்டுமே பிரச்னையை தீர்க்க முடியும் என்று கூறினார்.