வெங்கடேச பண்ணையார் நினைவு தினம்.. தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் குவிப்பு.. 144 தடையுத்தரவு
தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையாரின் 14வது நினைவு நாளை முன்னிட்டு, செப்டம்பர் 25ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27ம் தேதிவரை வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, ஜெயலலிதா ஆட்சியின்போது, வெங்கடேச பண்ணையார் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டு, வரும் 26ம் தேதி 14வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
வெங்கடேச பண்ணையாரின் சமாதி திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் கிராமத்தில் உள்ளது. 26ம் தேதி, பண்ணையாரின் நினைவு தினம் வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார் என்பதால், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் நினைவு தினத்தில் கலந்து கொள்வார்கள். மேலும், மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து குவிவார்கள் என்பதால் மாவட்டம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன. கொலையான பசுபதி பாண்டியன் ஆதரவாளர் சிங்காரத்தை நெல்லையில் போலீஸ் ஜீப்பில் வைத்தே வெட்டி கொலை செய்த வழக்கில் வெங்கடேஷ் பண்ணையாரின் பங்காளி சுபாஷ் பண்ணையாரை தேடப்படும் குற்றவாளியாக நெல்லை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே அவர் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்திற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பில் போலீசார் அவரை கைது செய்ய கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் பரபரப்பில் உள்ளது.