சிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.
கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல் என மதுரை மக்களவை தொகுதி உறுப்பினரும், கீழடியை பற்றி பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவருமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: கீழடியை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில், உங்கள் பங்கு முக்கியமானது...அதைப்பற்றி முதன்முதலில் நீங்கள் அறிந்தது எப்போது?
பதில்: கீழடியில் முதற்கட்ட அகழாய்வை தொடங்குவதற்கு முன்பு சுமார் ஒரு வருடக்காலமாக வைகை நதியின் இரண்டு கரைகளையொட்டி உள்ள அனைத்து கிராமங்களிலும் மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்தியது. அமர்நாத் ராமகிருஷ்ணன், வேதாச்சலம் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தும் தகவல் எனக்கு கிடைத்தது. இதையடுத்து ஆய்வு முடிவு என்னவாக இருக்கும் என்ற வேட்கை எனக்கு ஏற்பட்டதை அடுத்து, அடிக்கடி நானும் அவர்களை தொடர்பு கொண்டு எனக்குத் தெரிந்த சில தகவல்களை தெரிவித்தேன். இறுதியில் 5 கிராமங்களை மத்திய தொல்லியல் துறை பட்டியலிட்டு அதிலிருந்து கீழடியில் அகழாய்வை தொடங்குவது என இறுதி செய்யப்பட்டது. இப்படித்தான் நானும் கீழடியை பற்றி முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
கேள்வி: வைகை நதிக்கரையோரம் நாகரீகம் பற்றி சொல்லுங்க..
பதில்: சங்கஇலக்கியத்தில் தமிழகத்தில் ஓடும் பல நதிகளை பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால் வைகையை மட்டும் தான் ''தமிழ் வைகை'' என்கிறது சங்க இலக்கியம். வேறெந்த ஒரு நதியையும் மொழியுடன் இணைத்து சங்க இலக்கியம் பேசவில்லை. தமிழ் வைகை என சங்க இலக்கியம் சொல்வதற்கு காரணத்தை ஆராய்ந்து பார்த்தோம் என்றால், தமிழ்மொழியின் ஆதி மரபு முளைத்த இடமாக வைகை இருந்திருக்கக் கூடும். எனவே வைகை நதிக்கரையில் இருந்து தான் நாகரீகம், தமிழ் பண்பாடு சார்ந்த விஷயங்கள் மேலெழுந்து வந்திருக்கும் என்பது எனது கருத்து. தமிழ் பண்பாட்டின் ஆதி நிலமாக வைகை நதிக்கரை இருந்திருக்கலாம்.
கேள்வி: கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு திருப்தியளிக்கிறதா..ஆய்வறிக்கை பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: அண்மையில் வெளியிடப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு ஆய்வறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. கீழடியில் நடைபெறும் அகழாய்வை தமிழகத்தின் புதிய மைல்கல் எனக் கூறலாம். தமிழக தொல்லியல்துறையினர் முதன்முதலாக நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு ஆய்வு நடத்தியது வரவேற்கத்தக்கது.
கேள்வி: கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கக்கோருகிறீர்கள்..அவ்வாறு அறிவித்தால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பதில்: ஒரு பாதிப்பும் ஏற்படாது, குடியிருப்பு பகுதியில் தொல்லியல் மேடுகள் இல்லாத போது எப்படி பாதிப்பு ஏற்படும். தென்னந்தோப்புகளில் தான் ஆய்வு நடைபெறுகிறது. அதன் உரிமையாளர்களை அழைத்து விவரத்தை விளக்கமாக எடுத்துக்கூற வேண்டும்.
கேள்வி: கீழடியை பற்றி புத்தகம் எழுதும் திட்டம் இருக்கிறதா?
பதில்: தற்போது அது போன்று திட்டம் இல்லை, கீழடியை பற்றி கட்டுரைகள் தான் எழுத வேண்டும் என நினைக்கிறேன். மேலும், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் முன்பை விட இப்போது பணிச்சுமை கூடிவிட்டது. ஆனால் புத்தகம் எழுதுவதை நோக்கி மனம் ஆர்வமாக இருக்கிறது, பார்க்கலாம்.
கேள்வி: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைக்க சர்வதேச அளவிலான அருங்காட்சியம் அமைக்க கூறுகிறீர்கள், எம்.பி.என்கிற அடிப்படையில் பிரதமரை சந்தித்து நேரடியாக முறையிடலாமே..?
பதில்: நீங்கள் சொல்வது போல் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறேன். முதற்கட்டமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டிருக்கிறேன், இன்றோ, நாளையோ(செவ்வாய்கிழமை) அவரை நேரில் சந்திக்க அதிக வாய்ப்பு உண்டு. அப்போது இது தொடர்பாக வலியுறுத்த உள்ளேன்.
என்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை..முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்