முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்தாகுமா? மார்ச் 8ல் தெரியும்
சென்னை: நெல்லை வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கில் மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றசாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என அரசு தலைமை குற்றவியல் வக்கீல் வாதிட்டுள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு மீது மார்ச் 8ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரியாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பணி நியமனம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி கடந்த 2015 பிப்ரவரி 20ல் தச்சநல்லூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து மாஜி வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் செந்தில் ஆகியோரை கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி போலீசார் கைது செய்தனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, த செந்தில் மற்றும் அக்ரியின் உதவியாளர் பூவையா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவு 7, கூட்டுச்சதி, தற் கொலைக்கு தூண்டிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் என் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது.
தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமியிடம் நான் நேரடியாக பணம் கேட்டு மிரட்டியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நீதிபதி வி.எஸ்.ரவி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி, ''ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவில் பதிவான வழக்கை, சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும். நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை,'' என்று வாதிட்டார்.
இதனையடுத்து அரசு தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம் ஆஜராகி, குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் உள்ளது. முன்னாள் உதவியாளர் பூவையாவின் வாக்குமூலமும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக உள்ளது. எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டியதில்லை. அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என வாதிட்டார். இதையடுத்து மனுவின் மீது மார்ச் 8ல் உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி ரவி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.