பசங்க "டீஸ்" பண்ணா பொண்ணுங்க சொல்வதே கிடையாது.. போலீஸ் வருத்தம்
சென்னை: சென்னை நகரில் ஈவ் டீசிங் குறித்து போலீஸாருக்கு வரும் புகார்கள் மிக மிக குறைவு என்று காவல்துறை தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை கேலி செய்யும் ஆண்கள் குறித்தும், தங்களை தேவையில்லாமல் பின் தொடர்ந்து தொல்லை செய்வோர் குறித்தும் பெண்கள் போலீஸாரிடம் புகார் தருவதே இல்லை. பெரும்பாலும் அமைதியாக இருந்து விடுகிறார்கள். பல கேஸ்களில் வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட இதை தெரிவிப்பதில்லை என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
சுவாதி விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. தன்னை ராம்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்த விவகாரத்தை தனது நட்பு வட்டாரத்தில் மட்டுமே அவர் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸில் புகார் கொடுக்க அவருக்குத் தோன்றவில்லை. தனது வீட்டிலும் கூட அவர் லேசு பாசாகத்தான் தெரிவித்துள்ளாரே தவிர முழுமையாக அவர் கூறவில்லை என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
எப்போதாவதுதான் புகார்கள் வருகிறது
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் கூறுகையில், எப்போதாவதுதான் இங்கு ஈவ் டீசிங் தொல்லை குறித்த புகார்கள் வருகின்றன. பெரும்பாலான பெண்கள் இதற்காக போலீஸை நாடுவதில்லை. அங்குதான் அவர்கள் தவறு செய்கிறார்கள்.
குடும்பப் பிரச்சினை மட்டுமே
இங்குள்ள குறை தீர்ப்புப் பிரிவுக்கு வீட்டில் நடக்கும் குடும்பச் சண்டை, மாமியார் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, கணவர் குடித்து விட்டு அடிப்பது போன்ற பிரச்சினைகளுக்காக மட்டுமே பெண்கள் புகார் தர வருகின்றனர்.
அரிதிலும் அரிது
அதேசமயம் ஈவ் டீசிங், பின் தொடர்ந்து வந்து காதலைச் சொல்லி ஏற்க வலியுறுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக புகார்கள் வருவதே இல்லை. மாதத்திற்கு ஒன்று அல்லது 2 புகார்கள் வந்தாலே அதிசயம்.
உடனே புகார் கொடுங்க
தங்களைப் பின் தொடரும் ஆண்கள் குறித்தும், ஈவ் டீசிங் செய்வோர் குறித்தும், காதலிக்குமாறு கூறி வற்புறுத்துவோர் குறித்தும் உடனடியாக பெண்கள் போலீஸை அணுக வேண்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் மிகப் பெரிய குற்றச் செயல்களை நடக்காமல் தடுக்க முடியும்.
சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்
பல இளம் பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவதுதான் புகார்கள் அதிகம் வராமல் இருக்க முக்கியக் காரணம். ஆனால் நிலைமை முற்றிய பிறகுதான் பலரும் வருத்தப்படுகின்றனர். அதை நாம் தவிர்க்க வேண்டும்.
விழிப்புணர்வு தேவை
இந்த விஷயத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை. இதை பெற்றோர்கள், வேலை பார்க்கும் இடத்தில் நிறுவனத்தினர், கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் ஆகியோர் பெண்களிடம் ஏற்படுத்த வேண்டும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே பெண்களுக்கு நாங்கள் தரும் அட்வைஸ் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.