ஆரணி அருகே புது "டிசைனில்" உலா வரும் கொசு.. என்னத்தைப் பரப்பப் போகுதோ.. மக்கள் பீதி!
ஆரணி அருகே அரிய வகை கொசுவை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிடித்து வைத்துள்ளார். இது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரிய வகை கொசு ஒன்றை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிடித்து வைத்துள்ளார்.
ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பூபாலன். வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் இல்லாததால் இவரது தூக்கமும் கெட்டது. அப்போது இவரது காலில் ஏதோ கொசு பலமாக கடிப்பதை உணர்ந்தார். அதை கையால் தட்டி விடும் போது அது பெரிய சைஸில் இருந்தது.
பாட்டிலில் அடைத்தார்
உடனே அந்த கொசுவை பாட்டிலில் பிடித்து வைத்துக் கொண்டார். இதை பொதுமக்களிடம் காண்பித்தார். இதை கண்ட மக்கள் இது என்ன புது சைஸில், புது டிசைனில் உள்ளதே என்று குழப்பமடைந்துள்ளனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பீதி
ஆரணியிலும் சில எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தற்போது அரிய வகை கொசு என்ற செய்தி ஒன்று இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் சுழன்று வருவதால் மக்கள் மேலும் பீதியில் உள்ளனர்.
நடவடிக்கை தேவை
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்னும் என்னென்ன அரிய வகை பூச்சிகள் கிளம்ப போகிறதோ என்ற கவலை அவர்களை சூழ்ந்துள்ளது. மேலும் அரிய வகை கொசு கூறப்படுவதை ஆய்வு செய்து அவ்வாறிருப்பின் அவற்றால் ஏற்படும் நோயிலிருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
முன்னாள் ராணுவ வீரர் பிடித்துள்ள பூச்சியானது அரிய வகை கொசுதானா என்பதை பூச்சியியல் துறையினர் ஆய்வு செய்வார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஒரு நாள் கரெண்ட் போனதால் நீண்ட நாள்களுக்கு தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.