கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்
Recommended Video
சென்னை: அடுத்த இரண்டு நாட்கள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மிக கனமழை வெளுத்து வருகிறது.
குறிப்பாக நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டு இல்லாத அளவாக ஒரு நாளில் 82 செ.மீ மழை பெய்தது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், " அடுத்த 2 நாள்கள் உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உளளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதி) அதீத கனமழை பெய்யும். காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்" என்றார்.