மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் காலமானார் (வயது 92)
திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான உமாநாத் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92/
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுபினர்களில் ஒருவரான இவர் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் வழக்கறிஞர் நிர்மலாராணி, வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட உ.வாசுகியின் தந்தை ஆவார்.
1922ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர் உமாநாத். கல்வி கற்பதற்காக சென்னைக்கு வந்தார். பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்.
1940ஆம் ஆண்டு சென்னை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். நாட்டின் 3வது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 1962 ஆம் ஆண்டு புதுக்கோட்டை லோக்சபா உறுப்பினரானார். பின்னர் 1977 முதல் 1980 வரை நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார் உமாநாத். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமாக சி.ஐ.டி.யூவில் நீண்டகாலம் பணியாற்றியவர்.
உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த அவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.