சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் தான் பயப்படுகிறார்கள்.. வெற்றிவேல் எம்எல்ஏ ஆவேசம்
சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் சிலர் செய்த தவறுக்கு பயந்து, ஏதேதோ செய்கின்றனர் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சேகர் ரெட்டியுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ, அவர்களெல்லாம் இப்போது பயத்தில் என்னன்னெவோ செய்கிறார்கள் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு எம்எல்ஏக்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, ஜக்கையன், சாத்தூர் சுப்பிரமணியம், செல்வம் மோகன் தாஸ், ஏழுமலை, சின்னத்தம்பி மற்றும் நாஞ்சில் சம்பத், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யாருக்கோ அடிமைபட்டுள்ள நிலையில், சசிகலா குடும்பத்தினர் மீது தேவையில்லாத பழி சுமத்தப்பட்டுள்ளது. நேரம் வரும் போது அனைத்து உண்மைகளும் வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், சசிகலா பெயரை பயன்படுத்தாமல் ஜெயக்குமார் ஓட்டுவாங்க முடியுமா?
அமைச்சர்கள் பயப்படுவது ஏன் என்று எனக்கு தெரியும். டிடிவி தினகரனை எதிர்க்கும் அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள். அமைச்சர்கள் சிலர் செய்த தவறுகளை மறைப்பதற்காக இப்படி ஒரு திடீர் முடிவை அமைச்சர்கள் எடுத்துள்ளனர். சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் பயந்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.