தினகரன் அணிக்கு எம்.எல்..ஏ.க்கள் தாவுவதை தடுக்கவே கொறடாவின் பரிந்துரை - வெற்றிவேல்
கொறடா பரிந்துரை மிரட்டும் வகையில் உள்ளது சட்டப்படி எங்களை கட்டுப்படுத்தாது என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை: முட்டாள்கள் சாம்ராஜ்யத்தில் அமர்ந்து கொண்டு முட்டாள்தனமான முடிவை எடுக்கின்றனர். இந்த மிரட்டல் எங்களை கட்டுப்படுத்தாது என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி டிடிவி தினகரன் ஆதரவைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர். புதுச்சேரியில் 19 பேர் தங்கியுள்ளனர்.
கொறடா பரிந்துரை
கொறடா பரிந்துரை இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை கொறடா ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கட்சி தலைமைக்கு எதிராக 19 பேரும் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏக்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடகா முன் உதாரணம்
கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி காலத்தில் எதிர்ப்பு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் கர்நாடக சபாநாயகர் போப்பய்யா. அதில் எடியூரப்பா அரசு வென்றது. இருப்பினும் தகுதி நீக்கம் செல்லாது என உச்சநீதிமன்றம் பிறகு தீர்ப்பளித்தது.
வெற்றிவேல் எம்எல்ஏ
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வத்தை முதலில் நீக்கட்டும்.
அச்சம் அதிகரிப்பு
எங்கள் தரப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர். முட்டாள்கள் சாம்ராஜ்யத்தில் அமர்ந்து கொண்டு முட்டாள்தனமான முடிவை எடுக்கின்றனர். இது எங்களை கட்டுப்படுத்தாது.
நாங்கள் கெட்டவர்களா?
ஊழல் குற்றச்சாட்டு வைத்தவர்கள் தற்போது ஊழல் இல்லை என்று சொன்னார்களா? ஓ.பன்னீர் செல்வம் எங்காவது வந்து மன்னிப்பு கேட்டாரா?. அவர்கள் நல்லவர்கள், நாங்கள் கெட்டவர்களா? நாங்கள் அதிமுக ஆட்சியைத்தான் விரும்புகின்றோம்.
சட்டப்படி சந்திப்போம்
பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. தீர்மானம் பற்றி முன்னரே அனுமதி வாங்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்தால் எங்கள் நிலைப்பாட்டினை அறிவிப்போம். சட்டப்படி எங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.
மிரட்டல் உத்தரவு
பல எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வருவதை தடுக்கவே பதவி நீக்க மிரட்டல்கள் விடுத்துள்ளனர். என்ன நிர்பந்தத்தின் அடிப்படையில் கொறடா இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.