தினகரனை கைது செய்தால் சட்டப்படி எதிர்கொள்வோம்... 'திகுதிகு' வெற்றிவேல்
தினகரன் மீது எதற்காக தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : டிடிவி தினகரன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று அவரது ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது : தினகரன் உள்ளிட்ட 36 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்டப்படி சந்திப்போம். கைது செய்வதென்றால் செய்யட்டும் அதற்காக தினகரன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை.
ஜனநாயகத்தில் அராஜகமான ஆட்சி நடப்பதை தினகரன் கூறுவதால் நசுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள். எது தேசத் துரோகம், நீதிமன்றத்திற்கு போனால் தான் முடிவு கிடைக்கும்.
எல்லோர் மீதும் நடவடிக்கை பாயுமா?
எங்கோ கட்சித் தொண்டர்கள் பிட் நோட்டீஸ் கொடுத்ததற்கும் டிடிவி தினகரனுக்கும் தொடர்புபடுத்துகிறார்கள். அந்த துண்டு பிரசுரத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் கூடத் தான் இருக்கின்றன, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா.
தனிப்பட்ட விஷயத்திற்காக பரோல்
சசிகலா பரோலில் வருவது அவரது தனிப்பட்ட விஷயத்திற்காக, பரோலில் வருவதற்கு சில சட்ட திட்டங்கள் உள்ளன. இதில் அரசியல் எதுவும் இல்லை. நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்த்துக் கொள்ளவே அவர் வருகிறார். சசிகலா வெளிவருவதால் எந்த சட்ட சிக்கலும் ஏற்படப் போவதில்லை.
எதற்கும் தயாராக இருக்கிறோம்
தினகரனை தமிழக அரசு கைது செய்தால் அதை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அரசியல் களத்தில் இதைக் கூட நாங்கள் சந்திக்க மாட்டோமா. இந்த வழக்கு மட்டுமல்ல இதுமாதிரி ஏகப்பட்ட வழக்குகளை பார்த்துவிட்டு தான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.
மதுவிலக்கு கொள்கையை பின்பற்றுபவர்
அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரன் காந்தி இல்லை என்கிறார். நாங்கள் காந்தி என்று எப்போதும் சொல்லவில்லை. அவர் தான் தீவிர காந்தியவாதி, காந்தியின் மதுவிலக்கு கொள்கையை அச்சுபிசகாமல் பின்பற்றுபவர் சி.வி.சண்முகம், என்றும் வெற்றிவேல் கூறினார்.