இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்: திருச்சியில் தொகாடியா 'திகில்' முழக்கம்!
திருச்சி: இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன்பாய் தொகாடியா திகில் முழக்கம் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொன்விழா ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீன்பாய் தொகாடியா ஆற்றிய சிறப்புரை:
அயோத்தியில் ராமர்கோயில் கட்டி முடிக்கும்போதுதான் நாங்கள் பொன்விழாவைக் கொண்டாட உள்ளோம். 14ஆம் நூற்றாண்டுக்கு முன்பு முஸ்லிம்கள் இல்லை. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவர்கள் இல்லை.
மெக்காவிலும், மதினாவிலும், ஜெருசலேத்திலும் பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் இல்லை. உலகெங்கும் இந்துக்கள்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய நிலை என்ன என்பதை நாம் உணர வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ன்படி சொந்த மதத்தை பிரசாரம் செய்ய முழு உரிமை உள்ளது. ஆனால், அதை சிலர் மதமாற்றம் செய்வதற்கான உரிமை என்றுக் கருதி பேசி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றிட வேண்டும்.
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 3 கோடி வங்கதேசத்தவர்களை வெளியேற்றிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் நாளை சென்னை, டெல்லியை ஆக்கிரமித்துவிடுவர். ஜெருசலம் செல்வதற்கும், மக்காவிற்கு செல்வதற்கும் நிதியுதவியை அளிக்கும் அரசுகள், இந்துக்கள் திருப்பதி சென்று வருவதற்கு ஒரு ரூபாய் கூட உதவி செய்வதில்லை.
இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு தொகாடியா பேசினார்.
சர்ச்சை
இதனிடையே ஶ்ரீரங்கத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் திருச்சியில் திறந்தவெளி மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கியது எப்படி என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.