விஷ்வஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது: தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி
விஷ்வஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : சகோதரத்துவத்தை குலைக்கும் விஷ்வஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று சட்டசபை உறுப்பினர்கள்தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டசபை உறுப்பினர்களான தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அமைதிப் பூங்காவாக திகழும்தமிழகத்தில் மத அடிப்படைவாதிகளின் கொடூரகரங்கள் நுழைவதை தமிழ் சமுதாயம் அனுமதிக்காத நிலையில், விஸ்வஹிந்து பரிஷத் என்ற அமைப்பு'ராமராஜ்ஜிய ரத யாத்திரை' என்ற பெயரில் தமிழகத்தில் பதட்டத்தை தூண்டி விட முயல்கிறது.
எதிர்வரும் மார்ச் 20ம் தேதியன்று, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் புளியறையில் நுழையவிருக்கும் இந்த யாத்திரையால், அண்ணன் தம்பிகளாய்வாழும் தமிழ்ச் சமுதாயத்தில் தேவையற்ற சமூகப் பதட்டம் உருவாகும் அபாயமிருக்கிறது .
கடந்த காலத்தில் இது போன்ற ரதயாத்திரைகளால் வட இந்தியாவில் கலவரங்கள் நடைபெற்றதை நாட்டுமக்கள் மறக்கவில்லை.
இந்நிலையில் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் என பூத்துக்குலுங்கும் தமிழ் நிலத்தில் ,மதவெறியின் நச்சுப்பாம்புகள் நடமாட அனுமதிக்க கூடாது என்பதே பெரும்பான்மையான தமிழர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், முன்னாள் முதல்வர் மாண்புமிகு 'சமூகநீதி காத்த வீராங்கணை ' ஜெயலலிதா அம்மாஅவர்களின் அரசுக்கு களங்கம் ஏற்படாத வகையில், இந்த ரதயாத்திரையை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.