பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுக்கும் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: உதவி பேராசியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுக்கும் மனுவை கோவை நீதிமன்றம் ஒத்திவைத்தது
உதவி பேராசியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் பேராசிரியர் தர்மராஜூம் கைதானார். கடந்த 2016-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட 80 பேராசிரியர் பணியிடங்களில் பலரிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் பேராசிரியர் அல்லாத பணியிடங்களை நியமித்ததில் லஞ்சம், விடைத்தாள்களை தயாரித்து வழங்கியதில் லஞ்சம், மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கியதாக போலி பில்கள் தயாரித்து லஞ்சம் என துணைவேந்தர் கணபதி மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது. அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்தார்.
இந்த நிலையில் கணபதியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், கோவை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை வரும் 12ம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கு என்றும் விரைவில் இதிலிருந்து துணைவேந்தர் கணபதி விடுதலையாவார் என்றும் அவரின் வழக்கறிஞர் ஞானபாரதி தெரிவித்துள்ளார்.