உயர்நீதிமன்றம் 'கிடுக்குப்பிடி' உத்தரவு... விசாரணைக்கு ஆஜரான துணைவேந்தர் கீதா லட்சுமி - வீடியோ
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகாத கீதா லட்சுமி, நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று ஆஜரானார். நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவும் ஆஜரானார்கள்.
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 7ஆம் தேதியன்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அதில் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், சொந்த ஊரில் உள்ள வீடு, கல்குவாரி என பல இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அதேபோல் நடிகர் சரத்குமார் வீட்டிலும், அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் பலமணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளின் கைகளில் கிடைத்தன.
அதையடுத்து ராதிகா மற்றும் சரத்குமாரை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பினர். அதன்படி அவர்கள் ஆஜராகி விசாரணை நடந்தது.
எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டில் 27 மணிநேரம் சோதனை நடந்தது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியபோதும், அவர் விசாரணைக்கு செல்ல மறுத்தார். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து உடனே இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.