துணை ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக சென்னை வந்தார் வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதியான பிறகு, முதல் முறையாக சென்னை வந்துள்ளார் வெங்கையா நாயுடு.
சென்னை: நாட்டின் துணை ஜனாதிபதியாக பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்க விழாவில் கலந்து கொள்வதற்காக வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகை தந்தார்.
மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியான பிறகு, அவர் முதல்முறையாக சென்னை வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார் வெங்கையா நாயுடு. அங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
அதன்பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள விழாவை தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர், அண்ணா பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.
துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிக்குபின் இன்று மாலையே வெங்கையா நாயுடு டெல்லி செல்கிறார்.