"குணா" ரேஞ்சுக்கு மக்களைக் கொண்டு போயிட்டீங்களேப்பா...!
திறந்திருக்கும் ஏடிஎம்மைப் பார்த்தால் மக்கள் பரவச நிலைக்குப் போய் விடுவதை வைத்து ஒரு மீம்ஸ் குரூப் நக்கல் வீடியோவைப் போட்டு கலகலப்பாக்கியிருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் இது வைரலாகி வருகிறது.
சென்னை: ஒரு விதமான பரவச நிலைக்கு மக்கள் போய் விட்டார்கள் என்பதைத்தான் இந்த காமெடி குசும்பு வீடியோ நமக்கு சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது. திறந்திருக்கும் ஏடிஎம்மைக் கண்டு குணா போல மெய் மறந்து புளகாங்கிதமடைந்து உணர்ச்சிவசப்பட்டு மக்கள் பாடும் நிலையில் இருப்பதாக இந்த நக்கல் வீடியோ சுட்டிக் காட்டுகிறது.
வங்கியில் பணம் இருக்கிறது.. ஆனால் அதைக் கையில் பெற தேவுடு காக்கும் நிலையில் மக்கள். திறந்திருக்கும் ஏடிஎம் எங்கே என்று தேடுவதற்கே பல மணி நேரம் பிடிக்கிறது மக்களுக்கு. திறந்திருக்கும் ஏடிஎம்மைக் கண்டால் ஏதோ காணக் கிடைக்காத அதிசயத்தைப் பார்த்தது போன்ற நிலைக்குப் போய் விடுகிறார்கள் மக்கள். அதன் பிறகு காத்திருக்கும் நீண்ட கியூ வரிசையில் நின்று அந்த மெஷின் தரும் 2000 ரூபாயை வாங்கிக் கொண்டு அடுத்தடுத்த பல வேலைகளைப் பார்க்க மக்கள் கிளம்பும் அவல நிலை.
இந்த நிலையை வைத்து நெட்டிசன்கள் சிலர் குணா பாட்டை அதில் கோர்த்து விட்டு கலகலப்பாக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.
மக்கள் குணா ரேஞ்சுக்குப் போய் விட்டதை அவர்கள் சிம்பாலிக்காக காட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!