என் உயிருக்கு எதுவும் ஆகாதே...சார் நான் படிக்கணும்... வெட்டுப்பட்ட கல்லூரி மாணவர் உருக்கம்- வீடியோ
Recommended Video
திருவள்ளூர் : திருநின்றவூரில் மாணவர் ஒருவர் முன்விரோதத்தின் காரணமாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வெழுந்த வந்த மாணவர் ஒருவரை வழிமறித்து மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னை ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். இவர் தலைமைச் செயலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் திருநின்றவூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் கடந்த வாரம் தகறாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இன்று கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவர் ரஞ்சித்தை பீர் பாட்டிலால் தாக்கி, பின்னர் கத்தியால் குத்தினர்.
இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித்தை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.
இதனிடையே கல்லூரி மாணவன் ரஞ்சித்தை கத்தியால் வெட்டிய சந்தோஷ், ஆகாஷ், யோகேஷ், விக்னேஷ் ஆகிய நான்கு பேரையும் திருநின்றவூர் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மாணவர் ரஞ்சித் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வாக்குமூலம் அளிக்கும் ரஞ்சித் மருத்துவரிடம், 'உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே சார்.. நான் படிக்கணும்..' என்ன எப்படியாவது காப்பாத்திடுங்க என்று பேசுவது நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.