நாயக்கர்களை விமர்சனம் செய்வதா?, சீமான் வீட்டை முற்றுகையிட நாயக்கர் அமைப்பு முடிவு
சென்னை: நாயக்கர்களை விமர்சனம் செய்து பேசிய 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட அந்த ஜாதிக்கான விடுதலை களம் அமைப்பு முடிவு செய்துள்ளது. நாளை இந்த முற்றுகை போராட்டம் நடக்க உள்ளதாக அவ்வமைப்பின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் கூறியுள்ளார்.
'நாம்தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து வந்த நாயக்கர்களால், தமிழர்கள் கொடுமைக்கு உள்ளானதாக பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார்.
இந்நிலையில், தேனிமாவட்டத்தை சேர்ந்த நாயக்கர் சங்க பிரதிநிதி ஜெகதீஷ் என்பவர் சமீபத்தில் சீமானை தொலைபேசியில் தொடர்புகொண்டு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.
இந்த பரபரப்பு ஓயும் முன்பாக, சீமான் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க நாயக்கர் ஜாதி அமைப்பான 'விடுதலை களம்' திட்டமிட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு, சென்னை, வளசரவாக்கத்திலுள்ள சீமான் வீட்டின் எதிரே நாயக்கர்களை திரட்டி முற்றுகை நடத்தப்போவதாக அதன் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.