விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுப் பட்டியல்- திருமாவளவன் அறிவிப்பு
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்படும் விருதுகள் பெறும் நபர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. வரும் ஜூன் 21-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, காமராசர் அரங்கத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகுதிவாய்ந்தவர்களுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்ற பெயர்களில் ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஏப்ரல் 14-ந் தேதி நடைபெறவேண்டிய இந்த விழாவைத் தள்ளிவைக்க நேர்ந்தது. அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டான இந்த 2016-ம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அம்பேத்கர் சுடர் விருதுக்கு நீதியரசர் கே.சந்துரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரியார் ஒளி விருது, முனைவர் வே.வசந்திதேவிக்கு வழங்கப்படுகிறது. காமராசர் கதிர் விருதுக்கு எல்.இளையபெருமாள் ( மறைவுக்குப் பின்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அயோத்திதாசர் ஆதவன் விருது பத்திரிகையாளர் ஞாநிக்கு வழங்கப்படுகிறது. காயிதேமில்லத் பிறை விருது நாகூர் ஹனீஃபாவிற்கு ( மறைவுக்குப் பின்) தேர்வுசெய்யப்பட்டுள்ளார். செம்மொழி ஞாயிறு விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது ஒவ்வொன்றும் பட்டயமும் ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும் கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.