அனிதாவின் மரணம்.. மதுரையில் வெகுண்டெழுந்த விடுதலைச் சிறுத்தைகள்!
மதுரை: அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வை அனுமதித்ததால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்பதால் மனம் நொந்த அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா தன்னுடைய உயிரை காவு கொடுத்துள்ளார். அனிதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது வீட்டிற்கு அருகில் உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவ அமைப்பினர் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் அருகே இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர் அமைப்பினர் போராடி வருகின்றனர். இதே போன்று மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனையடுத்து சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.