ஜெ. மரணம், ஜல்லிக்கட்டு விவகாரங்களில் ஒழுக்கத்தோடு நடந்த தமிழக மக்கள்.. வித்யாசாகர் ராவ் உருக்கம்
சென்னை: தமிழக மக்களுக்கு, விடைபெறப்போகும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநராக, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித்தை முழு நேர ஆளுநராக சமீபத்தில் குடியரசு தலைவர் அறிவித்தார். தமிழக அரசு சார்பில் வித்யாசாகர் ராவுக்கு நாளை பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வித்யாசாகர் ராவ் ஆளுநராக பொறுப்பு வகித்த காலகட்டம் பல்வேறு அரசியல் காரணங்களால், தமிழகத்து வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமாகிவிட்டது.
இதையொட்டி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்கள் என்மீது அன்போடும், பாசத்தோடும் இருந்தார்கள். ஜெயலலிதா மறைவு, ஜல்லிக்கட்டு விவகாரம், வர்தா புயல் பாதிப்பு போன்ற தருணங்களில், மக்கள் மிகவும் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் நடந்துகொண்டார்கள்.
தொழில்நுட்பம், சுகாதாரத்துறை ஆகியவற்றில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சியுடன் தமிழக மக்கள் செழித்தோங்க வாழ்த்துகிறேன்.
முதல்வர், அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திற்கு கமிட்டிகள் அமைத்தது, உயர் கல்வித்தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆளுநர்.