புழல் சிறை கைதிகளுக்கு சொகுசு வசதி.. டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு?
புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து தரப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து தரப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை சிறைத்துறை டிஐஜி முருகேசன் மறுத்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் உள்ள தீவிரவாதிகளுக்கு சிறப்பு வசதி செய்து தரப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதி ரசூலுதீன் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வசதி
தற்போது 250 கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் அறைகளில் டி.வி. உள்ளிட்ட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் வெளியானதால் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிவி ரேடியோக்கள் பறிமுதல்
இந்நிலையில் புழல் சிறையில் டிஐஜி முருகேசன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கைதிகளின் அறையில் 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் இடமாற்றம்
இதைத்தொடர்ந்து கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட சிறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. புழல் சிறை அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
டிஐஜி வீட்டில் ரெய்டு
இந்நிலையில் சென்னை புழல் சிறைத்துறை டிஐஜி முருகேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியானது. புழல் சிறை வளாக குடியிருப்பில் உள்ள டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.
செல்போன்கள் பறிமுதல்
இதனிடையே புழல் சிறையில் இன்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. கைதிகள் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் 4 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிம்கார்டுகள் பறிமுதல்
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜப்பான், குணசேகரன் அறையில் இருந்து 4 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து மொபைல் போன் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரெய்டு இல்லை
ஆனால் இதனை சிறைத்துறை டிஐஜி முருகேசன் மறுத்துள்ளார். தனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.