நிதியுதவி அளிப்பதாக அரியலூர் மாணவியை ஏமாற்றியது யார்?.. உண்மையை விளக்கும் விஜய் நற்பணி மன்றம்!
Recommended Video
அரியலூர்: மாணவி ரங்கீலாவை விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியே நிதியுதவி அளிப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், நற்பணி மன்றம் அல்ல என்றும், மாணவிக்கு கல்வி உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் விஜய் ரசிகர் மன்றத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அரியலூரைச் சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவருக்கு கன்னியாகுமரி விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக இருந்த ஜோஸ்பிரபு கல்விக்கட்டணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால் உறுதியளித்தபடி நிதியுதவி செய்யாததால் படிப்பை தொடர முடியாமல் வீடு திரும்பியுள்ளார் ரங்கீலா. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாணவி ரங்கீலா விஜய் பிறந்தநாளின் போது சென்னைக்கு அழைத்து சென்று விஜயிடம் இருந்து சான்றிதழ் பெறுவது போல் எல்லாம் புகைப்படம் எடுத்ததாக கூறினார்.
ஏமாற்றம்
ஆனால் சொன்னது போல கல்வி நிதியுதவி அளிக்காததால் படிப்பு பாழாகிப் போய்விட்டதாக ரங்கீலா தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கல்வி நிதியுதவி தருவதாக ஏமாற்றிவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நீக்கப்பட்ட நிர்வாகி
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து அரியலூர் மாவட்ட விஜய் நற்பணி மன்றத் தலைவர் சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது : அரியலூர் மாணவி ரங்கீலாவிற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தவர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜோஸ்பிரபு என்பவர்.
தொடர்பில்லை
அவர் நீக்கப்பட்டது தெரியாமல் ரங்கீலா அவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டு பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளார். ரங்கீலாவிற்கு ஜோஸ்பிரபு அளித்த வாக்குறுதி குறித்து எனக்கோ உள்ளூர் நிர்வாகிகளுக்கோ தெரியாது.
காழ்ப்புணர்ச்சி
உண்மை நிலை இப்படி இருக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் ரசிகர்கள் ஏமாற்றி விட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. நாங்கள் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றியதாக திரித்து செய்திகள் பரப்பப்படுகின்றன.
நிதியுதவி செய்யத் தயார்
மாணவ சமுதாயத்தின் மீது விஜயும் அவரது ரசிகர்களும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நாடு நன்கு அறியும். மாணவி ரங்கலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் கல்வியைத் தொடர நிதிஉதவி வழங்கத் தயாராக உள்ளோம். அந்த நிதியை பெற்று மாணவி தனது கல்வியைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.