அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்திக்கும் விஜய் படங்கள்.. பின்னணியில் பரபரப்பு காரணங்கள்!
சென்னை: நடிகர் விஜய் திரைப்படங்கள் பிரச்சினை இன்றி வெளியே வந்தாலே பெரும் சாதனை என்பதைப்போலத்தான் உள்ளது இன்றைய நிலவரம். அடுத்தடுத்து அவரது திரைப்படங்கள் வெளிவரும் நேரத்தில் எல்லாம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார், அல்லது மாட்டி வைக்கப்படுகிறார்.
இந்த பிரச்சினைகளுக்கு காரணம், விஜய்க்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவரது படங்களில் இடம் பெறும் காட்சிகளும், வசனங்களும்தான் என்பதை உற்றுப்பார்த்தால் தெரியும்.
அரசியல் ஆசை
விஜய், இளைய தளபதியாக இருந்தவரை அவர் ஆள்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் செல்லப் பிள்ளையாகத்தான் இருந்தார். ஆனால், விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பது அரசல் புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்ததில் இருந்து அவருக்கு தடைகள் பல போடப்படுகின்றன.
தலைவா
முதலில் தலைவா படத்தில் இருந்து பிரச்சினை ஆரம்பித்தது. தலைவா என்பதே அரசியல்கட்சியினருக்கு உறுத்தலாக இருந்த நிலையில், அதன் சப்-டைட்டிலான 'டைம் டூ லீட்' அவர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தலைமையேற்க நேரம் வந்துவிட்டது என்று பொருள்பட தலைப்பு வைப்பது சாதாரண நடிகர் என்றால் விட்டிருப்பார்கள். தலைப்பு வைத்தது, தமிழ்நாட்டிலேயே அதிக ரசிகர் மன்றங்களை வைத்துள்ள ஒருவர் என்பதால்தான் சகிக்க முடியவில்லை சிலருக்கு.
கடும்பாடு பட்ட விஜய்
தலைவா படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், யாரோ தியேட்டர்களுக்கு பாம் வைத்துவிடுவதாக மிரட்டியதாக கூறி, ரிலீசுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்தது தமிழக அரசு. தயாரிப்பாளர்கள் வயிற்றில் ஈரத்துணி கட்டியதால், கொடநாட்டுக்கே ஓடிப்போனார் விஜய். ஆனால், அவருக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதால் திரும்பி சென்னைக்கே வந்ததாக தகவல். ஒருவழியாக சில பல நாட்கள் கழித்துதான் படம் ரிலீஸ் ஆனது. படத்தை ரிலீஸ் செய்ய உதவியதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்து பவ்யம் காட்ட வேண்டியதாயிற்று விஜய்க்கு.
துப்பாக்கி
துப்பாக்கி திரைப்படம் வெளியானபோது, அதன் தலைப்பை வைத்து ஒரு சாரார் பிரச்சினை கிளப்பினர். மற்றொரு பக்கம், தீவிரவாதிகளுக்கு இந்தியாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட மத்தினர் உடந்தையாக இருப்பதால்தான் குண்டு வெடிப்புகள் நிகழ்வதாக படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாக அந்த மதப்பிரிவினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதையடுத்து படத்தின் காட்சிகளில், குறிப்பிட்ட மதத்தினரின் பெயரை சொல்லும்போது, பீப்... சத்தம் ஒலிக்க செய்யப்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று பெருமூச்சு விட்டார் விஜய்.
கத்தி
துப்பாக்கி இயக்குநர் முருகதாசுடன் மீண்டும் இணைந்து உருவான, கத்தி திரைப்படம் வெளியானபோது, அது ராஜபக்சே ஆதரவு அமைப்பான லைகா நிறுவனத்தின் தயாரிப்பு என்று கூறி, சீமான் தவிர்த்து பிற தமிழ் போராளிகள் போராட்டம் நடத்தினர். பெரும் பரபரப்புக்கு நடுவே, தமிழக திரையரங்குகளில், லைகா என்ற பெயரை நீக்கிவிட்டே படம் திரையிடப்பட முடிந்தது. ஆனால், லைகா தொடர்பான எத்தனையோ, பிற நிகழ்வுகளை தமிழ் போராளிகள் என கூறியவர்கள் எதிர்க்கவில்லை என்பது, விஜய் ரசிகர்களுக்கு ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது.
எதிர்க்கட்சிக்கும் கடுப்பு
அதுவரை ஆளும் தரப்பில் இருந்து மட்டுமே எதிர்ப்பை சந்தித்த விஜய்க்கு, கத்தி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு டயலாக், எதிர்த்தரப்பிலும் பகைமையை சம்பாதித்து கொடுத்தது. "2ஜின்னா என்ன.. வெறும் காத்து.. வெறும் காத்துல இருந்தும் ஊழல் செய்யுற நாடுங்க" என்று ஒரு டயலாக்கை உச்ச ஸ்தாபியில் விஜய் பேசியிருந்தது திமுக தரப்பை அதிருப்தியடையச் செய்திருந்தது தனிக்கதை.
புலிக்கு சிக்கல்?
இந்நிலையில்தான், பெரும் எதிர்பார்ப்போடு வரும் புலி திரைப்படத்திற்கும் பிரச்சினை கிளம்பியுள்ளதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. நாளை படம் ரிலீசாகும் நிலையில், இன்றே விஜய் மற்றும் பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடந்துள்ளது சந்தேகங்களை கூடுதலாக்குகிறது. ஐடி துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு, அதிகாரம்மிக்க தலைவர் தமிழகத்தில் யார் என்பது விஜய் ரசிகர்களுக்கு புரியாமல் இல்லை.
கதை இதுதான்
புலி படத்துக்கு பிரச்சனை எழ காரணம், அதன் கதையமைப்புதான் என தெரிகிறது. ராணியான ஸ்ரீதேவியை கூடவே இருந்து, கெடுமதியுடையவராக வைத்திருக்கிறாராம், ராஜாங்க ஊழியர் சுதீப். எனவே, "நீங்க நல்லவங்கதான், உங்க கூட இருக்குறவங்கதான் கெடுத்துட்டாங்க.." என்ற அர்த்தத்தில் புலி படத்தில் ஸ்ரீதேவியை பார்த்து விஜய் வசனம் பேசுவது போன்ற காட்சி இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது யாரை உருவகம் செய்யும் காட்சி என்பதை வாசகர்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.
மன்னர் ஆகும் விஜய்
புலி படத்தின் கிளைமேக்சில், ராணி ஸ்ரீதேவி தனது கிரீடத்தை விஜய்க்கு கொடுத்து நீதானப்பா, இந்த நாட்டை ஆள தகுதியான ஆள் என்று சர்டிபிகேட் கொடுக்கும் காட்சியும் இருப்பதாக கூறப்படுகிறது. இது 'டைம் டூ லீட்' வார்த்தைக்கு சற்றும் சளைத்த காட்சியில்லை என்பதை கண்கூடு.
நம்பிக்கையின் கீற்று
புலி படத்தின் முதல் டிரைலர் காட்சி ஒரு மாதம் முன்பு வெளியானது. அதில், ஆங்கிலத்தில் வரும் அடுத்தடுத்த வார்த்தைகளின் தொகுப்பு இப்படி இருந்தது: "இருளால் ஆளப்படும் ஒரு நாட்டில், நம்பிக்கையின் ஒளி, இளையதளபதி விஜய்". இந்த வரிகள் யார் கண்களை உறுத்தியதோ, சமீபத்தில் வெளியான 2வது டிரைலரில் நம்பிக்கையின் ஒளியையும் காணோம், இருள் ஆட்சியையும் காணோம். இளையதளபதி விஜய் மட்டும்தான் காண்பிக்கப்பட்டது.
கமல், விஜய்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பகைமையை தொடர்ந்து சம்பாதித்து வரும் விஜய்க்கு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்தான் என்கின்றனர் அரசியல் மற்றும் திரைத்துறை பார்வையாளர்கள். கமல்ஹாசனை போலவே, விஜயும் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கிறார். இருவரும் தமிழர்கள் என்பதாலேயே பிரச்சினைகளும் அதிகமாக இருப்பதாக அவர்களது ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர்.