பெங்களூரின் பிரபல ரெளடி 'கவலா' ஓசூரில் ஓட ஓட வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசனட்டி பாரதி நகரில் வசித்து வந்தவர் விஜயகுமார் என்கிற கவலா (40). இவர் பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கர்நாடகாவில் ரவுடி கும்பல் தலைவனாகவும் செயல்பட்டு வந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவின் மிக நெருங்கிய கூட்டாளியான இவர், அவரது ஆதரவோடு பல கிரிமினல் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
பெங்களூரில் தொழில் போட்டி காரணமாக விஜயகுமாருக்கும், மற்றொரு ரவுடி கும்பல் தலைவனான குட்டி என்ற திருகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் உயிருக்கு பயந்து கொண்டு விஜயகுமார் தனது மனைவி சாந்தி (28) மற்றும் 2 குழந்தைகளுடன் வேலூருக்கு குடிவந்து வந்தார். பின்னர் ஒசூரில் குடியேறினார்.
இந் நிலையில் நேற்று பெங்களூரில் கன்னட சினிமா படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விஜயகுமார் பெங்களூர் சென்றார். பின்னர் விழாவை முடித்து கொண்டு மீண்டும் ஓசூருக்கு புறப்பட்டார்.
நள்ளிரவு 11.30 மணியளவில் இவர் ஓசூர் சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சந்தாபுரா- ஜூஜூவாடி பகுதிக்கு இடையே காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது இவரது காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் திடீரென ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியது.
ஓடிய விஜயகுமார்
இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கும்பல் விஜயகுமாரின் கார் கண்ணாடியை அரிவாள்களால் உடைத்தனர். மேலும் அவரது கண்ணிலும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் உயிருக்கு பயந்து விஜயகுமார் காரை விட்டு இறங்கி உயிர் தப்புவதற்காக ஓடினார்.
தலையில் 15 வெட்டுக்கள்
ஆனாலும் அந்த கும்பல் நடுரோட்டில் விஜயகுமாரை ஓட, ஓட விரட்டி வீச்சரிவாளால்களால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலையில் மட்டும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. தலை பிளந்து அவரது மூளை சிதறியது.
உயிரிழந்த ரவுடி
இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதுப்பற்றி தெரியவந்ததும் அங்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஓசூரில் பதற்றம்
ரவுடி விஜயகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது கூட்டாளிகள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
பழிக்குப் பழி
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட விஜயகுமார் மீது கர்நாடகாவில் ஒரு கொலை வழக்கு உள்பட மொத்தம் 33 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே முன்விரோத தகராறில் போட்டி ரவுடி கும்பல் அவரை தீர்த்து கட்டியிருப்பது தெரியவந்தது.