வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்று கூறியும் விஜயபாஸ்கர் காதில் வாங்கி கொள்ளவில்லை: ஓபிஎஸ் பகீர்
ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தது யார் என்ற தகவலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் தடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் தொண்டர்கள் வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்று கூறியும் அதனை விஜயபாஸ்கர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட சேனியம்மன் கோவில் தெரு, ரத்தின சபாபதி தெரு, பெருமாள் கோவில் தெரு, திருநாவுக்கரசர் தோட்டம், திலகர் நகர் உள்பட பல இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று நேற்று ஓ.பன்னீர்செல்வம் தங்களின் சின்னமான இரட்டை மின் விளக்குக்கு வாக்குகள் சேகரித்தார்.
அடிப்பார்கள் என்று கூறினேன்
பிரச்சாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, அவரை மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லலாம் என்று நான் விஜயபாஸ்கரிடம் கூறினேன். ஜெயலலிதாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் நம்மை வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றும் அவரிடம் கூறினேன்.
காதில் வாங்கி கொள்ளவில்லை
ஆனால் விஜயபாஸ்கர் காதில் வாங்கி கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்பும், பின்பும் நடந்தது என்ன?
எனவே ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முன்பும், பின்பும் நடந்தது என்ன? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தினால் தான் நம்முடைய தர்மயுத்தம் வெற்றி பெறும்.
விரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்
விரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும். அம்மா அரசு அமையும். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தின் போது பேசினார்.