அது தப்பில்லைன்னா.. ஆண்களின் ஆண்மை குறித்தும் பகிரங்கமாக விவாதிக்கலாமே!
சென்னை: பெண்களின் அழகை விவாதிப்பது என்ன தப்பு என்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி இயக்குநர் ஆண்டனி கேட்டுள்ளார். வாஸ்தவம்தான். அதேசமயம், இதே டிவியில் இதே நிகழ்ச்சியில் ஆண்மையில் சிறந்தவர்கள் கேரளத்து ஆண்களா அல்லது தமிழகத்து ஆண்களா என்ற நிகழ்ச்சியை நடத்த முன்வருவார்களா என்ற கேள்வி எழுகிறது.
அழகைப் பற்றி விமர்சிப்பதில் தவறு இல்லைதான். ஆனால் அது என்ன இரு மாநில பெண்களை கோர்த்து விட்டு விவாதம் என்பதுதான் பிரச்சினை. இந்த விவாதத்தின் அடிப்படை பொருளே சர்ச்சையாக இருக்கிறது.
பெண்கள் என்றால் அழகு, பேஷன், காட்சிப் பொருள் என்பதுதானா.. அதைத் தாண்டி அவர்களிடம் வேறு எந்த விஷயமும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது. மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு தொலைக்காட்சி, ஆக்கப்பூர்வமான விஷயங்களை கையில் எடுத்து விவாதிக்கலாமே. ஏன் அழகில் போய் சிண்டு முடியப் பார்க்கிறது என்பதுதான் மக்களின் கேள்வி.
இரு மாநில ஆண்மை குறித்துப் பேசலாமே
பெண்களின் அழகை விவாதிப்பதில் தவறில்லை என்றால் ஆண்களின் ஆண்மை குறித்தும் கூட விவாதிக்கலாம். காரணம், இதுவும் கூட இன்று ஒரு சமூகப் பிரச்சினைதான்.
ஆண்மையில் சிறந்த மாநிலம் எது
ஆண்மையில் சிறந்தவர்கள் கேரளத்து ஆண்களா இல்லை தமிழகத்து ஆண்களா என்று விவாதம் செய்ய இவர்கள் முன்வருவார்களா என்று சமூக வலைதளங்களில் பலரும் கேட்டதைப் பார்க்க முடிந்தது. வாஸ்தவமான கேள்விதான். இப்படி ஒரு பொருளில் இவர்கள் விவாதம் நடத்த முன்வருவார்களா என்று அவர்கள் கேட்கிறார்கள்.
போகப் பொருட்களாக பெண்கள்
விவாதம் எப்போதுமே நல்லதுதான். யாருமே அதை தவறு என்று சொல்ல முடியாது. மாட்டார்கள். ஆனால் எடுக்கும் பொருள்தான் முக்கியம். நம்மிடம் மீடியம் இருக்கிறது என்பதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இஷ்டத்திற்கு எதையும் செய்யலாம் என்றால் எப்படி என்பது பலரின் கருத்து.
ஆண்டனிக்கு ஏன் கோபம் வருது
இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை விதித்து விட்டது என்றதும் இயக்குநர் ஆண்டனி தனது முகநூலில் கோபம் காட்டியுள்ளார். இதில் கோபத்திற்கு என்ன வேலை. இரு மாநில பெண்கள் மத்தியில், குறிப்பாக தமிழக பெண்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நி்கழ்ச்சியை தடுக்காமல் விட்டிருந்தால் போலீஸார் மீதுதான் மக்களின் கோபம் திரும்பியிருக்கும். காவல்துறை தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளது.
பெண்களின் அறிவு குறித்துப் பேசுங்கள்
பெண்களின் அழகை அலசி ஆராய்வதை விட்டு விட்டு (காரணம் என்னதான் கன்ட்ரோல்டாக நீங்கள் விவாதித்தாலும் கூட அது வேறு பக்கம்தான் இட்டுச் செல்லும் மக்களை), அவர்களின் அறிவு வளர்ச்சி, அவர்களின் திறமை, அவர்களின் உயர்வு, அவர்களின் சாதனைகளை ஒரு தொடர் விவாதமாக கொண்டு செல்லுங்கள். பெண்மை உங்களைப் போற்றும்.
சாதா டிவிகள் இதுபோன்ற உப்புச் சப்பில்லாத விவாதங்களை நடத்திக் கொள்ளட்டும். மக்களின் மனதில் இடம் பிடித்த விஜய் டிவி நல்ல விஷயங்களை மட்டுமே விவாதிக்கட்டும். இதுதான் மக்களின் எண்ணம்.