விஜயபாஸ்கர் நண்பர் சுப்ரமணியம் விஷம் குடித்து தற்கொலை- அவசரமாக உடல் தகனம்
விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மின் மயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
நாமக்கல்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்ரமணியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்ரமணியத்தின் வயிற்றில் விஷம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து சுப்ரமணியத்தின் உடல் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவசரம் அவசரமாக மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணியம், அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான இவர் அரசு கட்டிட ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர் உள்ளிட்டோருக்கு சொந்தமான குவாரி உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுப்ரமணியம் வீட்டில் ரெய்டு
அதே நாளில் சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
சோதனை நடைபெற்றபோது, சுப்ரமணியம், சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். இதன் காரணமாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருவதற்கான சம்மனை அவரது மகன் சபரியிடம் வழங்கப்பட்டது.
வருமான வரி அலுவலகத்தில் ஆஜர்
வெளிநாட்டில் இருந்து சுப்ரமணியம் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமையன்று காலை நாமக்கல் அருகே மோகனூர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது விவசாய தோட்டத்துக்கு சுப்ரமணியம் சென்றுள்ளார். அங்கு அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
தற்கொலை
தோட்டத்தில் வேலை செய்தவர்கள் பதறியடித்துக்கொண்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோகனூர் போலீசார் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றில் விஷம்
இந்நிலையில், சுப்ரமணியத்தின் உடல் நேற்று மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் விஷம் இருந்ததாகவும், இதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
உடல் தகனம்
அவர் இறந்து கிடந்த இடத்தில் குளிர்பான பாட்டில் கிடந்ததாகவும், அதில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மோகனூர் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங் களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து சுப்ரமணியம் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நாமக்கல் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவசரம் ஏன்?
சுப்ரமணியத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில் உடனடியாக பிரேத பரிசோதனை முடிந்து அவசரம் அவசரமாக அவரது உடரை தகனம் செய்தது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.