நெருக்கும் வருமான வரித்துறை.. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு கேட்கும் விஜயபாஸ்கர்
வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 3 நாட்கள் விலக்கு அளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ 89 கோடி வரை பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணமும் சிக்கியது.
இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் தொடர்ந்து ஆஜராகும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்களுக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், விசரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு 3 நாட்கள் விலக்கு அளித்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.