மகள், மனைவி, அக்கா.. குடும்பத்தோடு வாக்கு சேகரிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளார். இதனால் தனது வெற்றிக்காக முதலில் எட்டு வயது மகளைக் களம் இறக்கிய அவர் தற்போது மனைவி, அக்கா ஆகியோரையும் தனக்காக பிரசாரம் செய்ய களம் இறக்கியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவருக்கு முத்தரையர் வாக்குகளால் பெரும் சவால் எழுந்துள்ளது.
முத்தரையர் சமூகத்தை விமர்சித்து அவர் பேசியதால், விஜயபாஸ்கரைத் தோற்கடிக்க முத்தரையர்கள் படு வேகமாக உள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரத்தை வித்தியாசமாக நடத்தி வருகிறார் விஜய பாஸ்கர்.
விராலிமலை தொகுதியில் தான் பிரசாரம் செய்யப் போகும் இடங்களுக்கு தனது மகள் பிரியதர்ஷினியையும் அழைத்துச் சென்று பேச வைத்தார்.
8 வயதேயாகும் பிரியதர்ஷனி தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு கூறி வாக்கு சேகரித்தார். மேலும் அதிமுக அரசின் நலத் திட்டங்களையும் அவர் கூறி ஓட்டு கேட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தனது மனைவி ரம்யாவையும் ஓட்டுக் கேட்க அனுப்பியுள்ளார் விஜயபாஸ்கர். ரம்யாவும், விஜயபாஸ்கரின் அக்காவும் தற்போது தொகுதியில் சுற்றி வந்து வாக்கு கேட்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவு தனக்கு சவால் உள்ளதால் விஜயபாஸ்கர் தனது குடும்பத்தையே பிரசாரத்திற்கு இறக்கியுள்ளது தொகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.