விஜயபாஸ்கருக்கு இறுகுகிறது பிடி... குட்கா விவகாரத்திலும் சிக்கலோ சிக்கல்
Recommended Video
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே ரூ20 கோடி லஞ்சம் பெற்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அவருக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழிலதிபர் மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மாதவராவின் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
இதையடுத்து அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
40 இடங்களில் ரெய்டு
இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
கட்டுக்கட்டாக பணம்
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர் கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள வீட்டில் ரூ 20 லட்சம் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விஜயபாஸ்கர் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.20 கோடி
இதுமட்டுமல்லாமல் செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் ஆகியவற்றை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளது குறித்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 6 மாதங்களில் மட்டும் அவர் ரூ. 20 கோடியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து சோதனையில் சிக்கிய லஞ்சப்பணம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
எதிர்பார்ப்பு
எனவே லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் இடியாப்ப சிக்கலில் குட்கா விவகாரத்தில் வசமாக சிக்கியுள்ளார் விஜயபாஸ்கர். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தக் கூடும் என்பதால் அதிமுக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.