8 மணி நேர விறுவிறு விசாரணை... விஜயபாஸ்கர் மனைவியிடம் ஐடி அதிகாரிகள் கேட்டது என்ன?
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் ஐடி அதிகாரிகள் 8 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறி்முதல் செய்யப்பட்ட 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் அவரது மனைவி நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளில் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மேற்கண்ட மூவருக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஆஜர்
இந்நிலையில், விஜயபாஸ்கரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.89 கோடி ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி ரம்யாவை நேற்று முன் தினம் மாலை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். எனினும் அவர் ஆஜராகவில்லை.
விசாரணை
இதனைத் தொடர்ந்து, நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் அவர் திடீரென ஆஜரானார். அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
கிடுக்குப்பிடி
அப்போது கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது? சொத்துக்கள் எப்போது வாங்கப்பட்டன? அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை துருவி துருவி ஐடி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
8 மணி நேரம்
நேற்று காலை 9 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வந்த ரம்யாவிடம் 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி, மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு தகவல்களை வருமானத் துறையினர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.