ஜெ. இருந்திருந்தால் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு பதவி நீடிக்குமா? - வெடிக்கும் செம்மலை- வீடியோ
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் விஜயபாஸ்கரும் செல்லூர் ராஜுவும் பதவியில் இருக்க முடியுமா என ஒபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேட்டூர்: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சரும் வைகை அணையில் தெர்மகோல் போட்ட அமைச்சரும் பதவியில் இருக்க முடியுமா? என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மேட்டூரில், ஒபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எம்.எல்.ஏ செம்மலை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சரும் வைகை அணையில் தெர்மகோல் போட்ட அமைச்சரும் பதவியில் இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தொண்டர்கள் இந்த அரசு நீடிப்பதை விரும்பவில்லை. அவர்கள் நிலையான செயல்படுகிற அரசைத்தான் விரும்புகிறார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார்.
வருமானவரி சோதனைக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரையும் வகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மகோல் போட்ட அமைச்சர் செல்லூர் ராஜுவையும் மறைமுகமாக செம்மலை தாக்கிப் பேசினார்.
அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் தகர்ந்துவிட்ட நிலையில் இரு கோஷ்டிகளும் ஒருவரையொருவர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தாக்கிப்பேசி வருகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சி செய்த போது அமைச்சர்கள் மேல் புகார் வந்தால் அவர்களை உடனடியாக பதவியிலிருந்து தூக்கி விடுவார். அதனால் எந்த அமைச்சர் எந்த துறையில் இருக்கிறார் என்று பொதுமக்களுக்குத் தெரியாமலேயே இருந்தது.