குட்கா விற்க லஞ்சம் வாங்கிய விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி
தமிழகத்தில் குட்கா விற்க லஞ்சம் வாங்கிய விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றுள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூருக்கு இன்று மு.க. ஸ்டாலின் சென்றார். தொகுதியை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே தற்போதுள்ள அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், புற்று நோயை உருவாக்கும் புகையிலை பொருட்களை விற்க விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருவது குறிப்பிடத்தக்கது.