நெல்லில் "அ" எழுதிய குட்டீஸ்... தேவகோட்டை பள்ளியில் விஜயதசமி விழா கொண்டாட்டம்
காரைக்குடி: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து மாலையிட்டு மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி ஆசிரியைகளால் நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை கல்விக் கண் திறப்பு விழாவாக நடைபெற்றது
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க வந்திருந்த பெற்றோர்களையும், மாணவர்களையும் ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.
இவ்விழாவானது நடராஜபுரம் சின்ன முத்து மாரியம்மன் கோவிலில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளம், நாதஸ்வர இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் பெற்றோர்களுடன் பள்ளியை அடைந்தனர். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை உரை நிகழ்த்தினார்.
பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியை லெட்சுமி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ, ஆ சொல்ல வைத்தனர். ஆசிரியை வாசுகி,முத்து மீனாள் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.
மாணவிகள் கார்த்திகா,ராஜேஸ்வரி,தனலெட்சுமி ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல வைத்தனர்.குழந்தைகளின் பெற்றோர்கள் சுதா, லதா, சாந்தி, கார்த்திகா சின்ன தம்பி ,கருணாநிதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார். பள்ளி விடுமுறை நாளாக இருந்த போதும் ஆசிரியர்கள் வந்திருந்து மாணவர் சேர்க்கை நடத்தியது குறிப்பிடத்தக்கது.