சட்டசபையில் ஜெ. படத்திறப்பு சரியே.. சப்பைக்கட்டு காரணங்களுடன் விஜயதாரணி விளக்கம்
சட்டசபையில் ஜெயலலிதா படத்திறக்கப்பட்டது சரியே என்று விஜயதாரணி எம்எல்ஏ தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது சரியே என்று விஜயதாரணி எம்எல்ஏ சப்பைக் கட்டு காரணங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும் அவரது படத்தை சட்டசபையிலிருந்து அகற்ற வேண்டும் என்று திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் அதை விஜயதாரணி எம்எல்ஏ வரவேற்றுள்ளார். ஜெயலலிதாவின் அருமை பெருமைகளை கூறிய அவர் படத்தை திறந்து வைத்த சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
பெண் தலைவர்
அப்போது சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி கூறுகையில், சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக நான் விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் ஒரு பெண் தலைவரின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பதை நல்ல நிகழ்வாக பார்க்கிறேன்.
3 முறை முதல்வர்
பெண்களுக்கு சாதகமான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. பெண் குழந்தை இறப்பு விதிகம் குறைப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் முன்னோடி திட்டங்களாக பிற மாநிலங்களில் இன்றைக்கும் பின்பற்றக் கூடிய நிலையில் உள்ளன. கட்சி கட்டுப்பாடு விதித்தாலும், தனிப்பட்ட முறையில் பெண் எம்எல்ஏ என்ற அடிப்படையிலும் அரசியலில் பெண்கள் போராடி வரும் நிலையில் 3 முறை முதல்வராக திறம்பட செயல்பட்டவர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.
இந்திராவுக்கு அடுத்த தலைவர்
அன்னை இந்திராகாந்திக்கு அடுத்தப்படியாக என்னையும் கவர்ந்த தலைவர் என்ற அடிப்படையில் இந்த விழாவில் கலந்து கொள்ள நான் விரும்பினேன். இருந்தாலும் கட்சியின் நிலைப்பாட்டால் இதில் பங்கேற்க முடியவில்லை. படத்திறப்பு விழா என்றில்லை ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவதாக இருந்தாலும் அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு. பெண்களின் ஆதரவு அவருக்கு உண்டு என்பதை நிலைநிறுத்தும் விதத்தில் எனது வாழ்த்தை சபாநாயகருக்கு தெரிவித்தேன்.
நிரபராதி
அவர் குற்றவாளி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கீழமை நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுபோல் அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ததில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
குற்றவாளி என தெரியாது
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செயல்பாட்டில் இருந்த போது ஜெயலலிதா தான் குற்றமற்றவர் என்ற மனநிலையோடுதான் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு பிறகுதான் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கே தாம் குற்றவாளி என்று தெரியாமல்தான் மரணித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்டத்தின் படி பொருந்தாது
அவர் உயிரோடு இருந்திருந்தால் அந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர் இறப்புக்கு பிறகு குற்றவாளி என்று கூறுவது சட்டத்தின் படி பொருந்தாது. அரசு பணியில் பணிபுரியும் மகளிருக்கு 6 மாதமாக இருந்த மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்த வேண்டும் என்று என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்றார் விஜயதாரணி.