ஆலந்தூரிலிருந்து பஸ் ஏறி பல்லாவரம் போய் இறங்கி போராட்டம் நடத்திய விஜயகாந்த்!
ஆலந்தூரிலிருந்து பஸ்ஸில் பயணம் மேற்கொண்டு பல்லாவரத்தில் போராட்டம் நடத்துகிறார் விஜயகாந்த்.
Recommended Video
சென்னை: ஆலந்தூரிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த் அங்கிருந்து பல்லாவரத்தில் இறங்கி பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது. சுமார் 66 சதவீதம் உயர்த்தியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மக்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்திவிட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நடத்திவிட்டன.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இன்றைய தினம் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் குறைத்துவிட்டது. இது கண்துடைப்பு என்று கூறிய தேமுதிக இன்று திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது.
அதன்படி பல்லாவரத்தில் இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்திற்கு பேருந்தில் பயணம் செய்தார் விஜயகாந்த். கன்டக்ரிடம் 500 ரூபாயை நீட்டி தொண்டர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார்.