என்னங்க இவ்வளவு மோசமா இருக்கு கவர்மென்ட் பஸ்ஸெல்லாம்.. ரெய்டு விட்ட விஜயகாந்த்!
சென்னை மாநகர பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை மாநகர பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. 66 சதவீதம் விலையேற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சொற்ப அளவில் கட்டண குறைப்பு
100 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வெறும் பைசா அளவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு குறைத்து உத்தரவிட்டது. இது வெறும் கண்துடைப்பு என்று கூறி நேற்று அனுமதியை மீறி சாலை மறியல் செய்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பேருந்தில் விஜயகாந்த் பயணம்
இதேபோல் பெரும் மூட்டையை பொதுமக்கள் தலையில் சுமர்த்தி விட்டு அதில் கடுகளவை மட்டும் நீக்குவது போல் இந்த பேருந்து கட்டண குறைப்பு உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தும் தெரிவித்தார். மேலும் நேற்று பல்லாவரத்தில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அவர் ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்கு பேருந்தில் பயணம் செய்தார். இந்த அனுபவங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருக்கைகள் மோசம்
இதுகுறித்து விஜயகாந்த் தனது தொடர் டுவீட்டுகளில் இன்று குறிப்பிடுகையில், அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பல்லாவரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவதற்காக சென்றபொழுது, பொதுமக்கள் அன்றாடம் பயணிக்கும் பேருந்தில் நேற்று பயணித்தேன். அந்த பேருந்தில் மக்கள் பயன்படுத்தும் இருக்கைகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை பார்த்தோம்.
முழுவதும் ரத்து செய்க
அனைத்து அரசு பேருந்தும் கட்டண உயர்வினால் காலியாகவே சென்றுகொண்டிருகிறது, பேருந்து கட்டண உயர்வை பற்றி பயணிகளிடம் கேட்டபொழுது இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்கள். எனவே உடனடியாக அரசு பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.