விஜயகாந்த் 65: 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை தமிழகமாக கொண்டாடும் தேமுதிக
சென்னை : வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வந்த விஜயகாந்த் பிறந்தநாள் இந்த ஆண்டு 'பசுமை தமிழகம்' என்ற பெயரில் தேமுதிகவினர் கொண்டாடப்பட உள்ளனர்.
கோயம்பேடு அலுவலகத்தில் தனது ராசிப்படி 5 மரக்கன்றுகனை நட்ட விஜயகாந்த் தமிழகம், புதுவையில் 2.5 லட்சம் மரக்கன்றுகளை நடப்போவதாக கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 65-வது பிறந்த நாளை ஆகஸ்ட் 25ம்தேதி கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு விஜயகாந்த் தனது பிறந்த நாளை பசுமை தமிழகம் என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகக்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கட்சி அலுவலக வளாகத்தில் தனது ராசிப்படி 5 மரக்கன்றுகளை அவர் நட்டார்.
நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். ஆண்டுதோறும் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையை விஜயகாந்த் வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான பிறந்தநாள் நன்கொடையை பள்ளி நிர்வாகிகளிடம் அவர் வழங்கினார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியின்போது பேசிய விஜயகாந்த் , எனது பிறந்த நாள் பசுமை தமிழகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று கூறினார். பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமை தமிழகம் என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இன்று மரக்கன்றுகள் கட்சி அலுவலகத்தில் நடப்பட்டன என்றார்.
பத்திரிக்கையாளருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் விஜயகாந்த் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிரேமலதா, எல்.கே.சுதிஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் பற்றி விமர்ச்சித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சினிமாவில் கூட விஜயகாந்த் மரக்கன்று நட்டதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது பிறந்தநாளை பசுமைத் தமிழகமாக கொண்டாடும் விஜயகாந்த், 2.5 லட்சம் மரக்கன்றுகளை நடப்போவதாக அறிவித்துள்ளார்.