லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் தான் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயகாந்த் பேசியுள்ளார்.
திருப்பூர்: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் ரோட்டில் தேமுதிக சார்பில் மே தினவிழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விஜயகாந்த், அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நமது நாட்டில் தொழிலாளர்களை யாரும் மதிப்பதில்லை. தமிழகத்தை ஆளும் அதிமுகவாக இருந்தாலும் சரி, ஆண்ட திமுகவாக இருந்தாலும் சரி, அவை தமிழகத்தை நாசமாக்கி விட்டன.
அரவை ஆலையில் இருந்து எனது வாழ்க்கையை தொழிலாளியாகத்தான் தொடங்கினேன். இன்றும் தொழிலாளர்களுக்காகவே குரல் கொடுத்து வருகிறேன். ஊழல் செய்பவர்களை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அவ்வாறு லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் தான் சிறைக்கு செல்வார்கள். அதனால் அவர்களுக்கு தான் பாதிப்பு என்று தெரிவித்தார்.