மேற்கு போனா போகட்டும்... கிழக்கு மா.செ.வுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்த விஜயகாந்த்
கன்னியாகுமரி: குமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் திமுகவில் இணைந்த அடுத்த சில மணிநேரங்களுக்குள் கிழக்கு மாவட்ட செயலாளரை கூடுதல் பொறுப்பாளராக நியமித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைக்கும், அதன் மூலம் எம்.எல்.ஏ ஆகி விடலாம் என்று சில மாவட்ட செயலாளர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். நேர்காணலின் போதும் அதையே விஜயகாந்திடம் கூறினர்.அதற்கு விஜயகாந்த், நீங்க எம்.எல்.ஏ ஆனா போதுமா? நான் முதல்வர் ஆக வேண்டாமா என்று கேட்டதோடு மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளர் ஆகிவிட்டார்.
விஜயகாந்தின் செயல் சில மாவட்ட செயலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த சத்தமில்லாமல் திமுக பக்கம் பலரும் சாய்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் திமுகவில் இணைந்தார். அப்போதே பிரேமலதா தேமுதிகவினரை எச்சரித்தார்.
ஸ்டாலின் மாய வலையை விரித்து காத்திருக்கிறார். ஒரு வீரனின் பெயரை வைத்துள்ள ஸ்டாலின், வீரனாக தேர்தல் களத்திற்கு கட்சியை கொண்டு வராமல், முதுகுக்கு பின்னால் இருந்து கோழை போல் குத்துகிறார்.
கோழைத்தனமாக, கேவலமாக நடந்து கொள்கிறார் ஸ்டாலின். இனியும் கோழைத்தனமாக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டாம், என ஸ்டாலினை விமர்சித்து எச்சரிக்கவும் செய்தார்.
ஸ்டாலினின் இந்த மாயவலையில் தேமுதிகவினர் யாரும் சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் இன்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் அறிவாலயம் சென்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களுக்குள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜெகநாதன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டடத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கே போனா போகட்டும் கிழக்குக் கூடுதல் பொறுப்பு கொடுப்போம் என்று நியமித்து விட்டார் விஜயகாந்த். தேர்தல் வருவதற்கு முன்பாக இன்னும் எத்தனை பேர் போகப் போகிறார்களோ? விஜயகாந்த் இன்னும் எத்தனை அறிவிப்புகளை வெளியிடுவாரோ தெரியலையே?