மலேசியாவில் சிக்கியுள்ள தமிழக இளைஞரை மீட்க விஜயகாந்த் வலியுறுத்தல்
மலேசியாவில் வேலைக்குச் சென்று பாதிக்கப்பட்டுள்ள தமிழக இளைஞரை மீட்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : மலேசியாவில் வேலைக்குச் சென்று பாதிக்கப்பட்டுள்ள தமிழக இளைஞர் மெய்கண்டனை மீட்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நேற்று வாலிபர் ஒருவர் மலேசியாவில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சி அழும் வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவியது. வேலைக்கு வந்த இடத்தில் தன்னைக் கொன்றுவிடுவதாக முதலாளி மிரட்டுவதாக அதில் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் அந்த வாலிபரை மீட்கக்கோரி விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அவலநிலை உள்ளது.
வெளிநாட்டில் கொத்தடிமைத்தனம்
இதனால் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, ஏமாற்றும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு கொத்தடிமைகளாக பணிபுரியக்கூடிய நிலை ஏற்படுகிறது.மேலும் வேலைபார்த்ததற்கான மாதச் சம்பளம் கொடுக்காமல், பல மணிநேரம் வேலைபார்க்கச் சொல்லி சித்ரவதை செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
மலேசியாவில் தமிழ் இளைஞர்
இதற்கு எடுத்துக்காட்டாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, கண்ணிராஜபுரத்தைச் சேர்ந்த கா.மெய்கண்டன் (எ) சந்திரன் என்பவர் மலேசியாவில் உள்ள தனியார் உணவகத்தில் 4 வருடங்களாக வேலைபார்த்து வந்தார். அவருக்கு சரிவர சம்பளம் கொடுக்காமல், வேலை பார்க்கச் சொல்லி கொடுமைபடுத்தியுள்ளார்கள். இதே உணவகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது.
தேமுதிக சார்பில் நடவடிக்கை
இதை அறிந்தவுடன் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த சம்பவம் குறித்து அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரித்துஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று மெய்கண்டனின் மனைவி தன் கணவரை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
இதேபோல் பல குடும்பத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகிறது.
இதை மத்திய, மாநில அரசுகள்,மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்டு தாயகம் திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச்செல்லும் கும்பல் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.